Thursday, September 1, 2016

கிறிஸ்து ராஜா (Standing on the Promises)

கிறிஸ்துராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்
(Standing on the Promises)

எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. 2 கொரிந்தியர் 1 : 20

Russell Kelso Carter
Standing on the Promises என்னும் இப்பாடலை எழுதிய ரஸ்ஸல் கெல்ஸோ கார்ட்டர் (Russell Kelso Carter) 1849ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி, அமெரிக்க தேசத்தின் பால்டிமோர் (Baltimore, Maryland) என்னுமிடத்தில் பிறந்தார்.  ரஸ்ஸல் கெல்ஸோ கார்ட்டர் அமெரிக்காவின் பென்னிஸில்வேனியா மாகாணத்தின் ஒரு ராணுவக் கல்விக்கழகத்தில் பயின்று வந்தார்.  மிகச்சிறந்த தடகள வீரராக இருந்த அவர், பிற்காலத்தில் தலைசிறந்த பயிற்சியாளராகவும் திகழ்ந்தார். இங்கிருக்கும்போதே மெத்தடிஸ்டு சபை ஒன்றிலும் குருவாகப் பணியாற்றிய அவர், பிற்காலத்தில் மருத்துவப்படிப்பும் முடித்து மருத்துவ சேவையும் ஆற்றி வந்தார்.  மேலும் இவர் பாடல்கள் எழுதுவதிலும், இசையமைப்பதிலும் சிறந்து விளங்கினார்.  1886ம் ஆண்டு ஜான் ஸ்வெனே (John Sweney) என்பவருடன் இணைந்து Songs of Perfect Love என்ற பாடல் புத்தகத்தை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்புத்தகத்திலேயே ரஸ்ஸல் எழுதிய Standing on the promises என்ற புகழ்பெற்ற பாடலும் அச்சிடப்பட்டது.

பிறப்பால் ரஸ்ஸல் கெல்ஸோ கிறிஸ்தவராக இருந்தபோதிலும், கிறிஸ்தவ பாடல்களை நிறைய எழுதியிருந்தபோதிலும், அவர் வேதாகமத்தில் உள்ள வாக்குத்தத்தங்களின் வல்லமையை தமது வாழ்வின் பிற்பகுதியிலேயே புரிந்துகொள்ள நேர்ந்தது.  தமது முப்பதாவது வயதில் ரஸ்ஸல் கடுமையான சுகவீனத்திற்கு உள்ளானார்.  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும் அவரைக் கைவிட்ட நிலையில், ரஸ்ஸலின் பார்வை தேவனை நோக்கித் திரும்பியது.  கடவுளிடம் முழங்காலிட்டு ஜெபிக்கத் துவங்கிய அவர், ‘தேவனே இந்நோயால் நான் மரித்தாலும் அல்லது பிழைத்தாலும் என் மீதமுள்ள வாழ்வு உம்முடைய பணிக்கானதாக மட்டுமே இருக்கும்’ என்று பொருத்தனை செய்து ஊக்கமாய் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டார்.  அந்த நொடிப்பொழுதிலிருந்து, ஆண்டவருடைய ஜீவ வசனம் அவருள் கிரியை செய்யத் துவங்கியது. அப்போதிருந்து தேவனுடைய குணமாக்கும் வாக்குத்தத்தங்களை நம்பி நிற்கத் துவங்கினார்.  ஒரு சில மாதங்களில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு, பூரண சுகம் பெற்றார்.

‘Standing on the Promises’ பாடலை அவர் இச்சம்பவத்திற்கு முன்னரே 2 கொரிந்தியர் 1:20ன் அடிப்படையில் எழுதிமுடித்திருந்தபோதிலும், ஆண்டவர் அவருக்கு அளித்த சுகத்திற்குப் பின்னரே அவரது வாழ்வில் இப்பாடல் அர்த்தமுள்ளதாகவும் அவருடைய மனதுக்கு மிகவும் பிரியமான பாடலாகவும் மாறிப்போனது. நோயுற்று, ஆண்டவரிடம் ஜெபித்து சுகம்பெற்ற பின்னர் ரஸ்ஸல் மேலும் 49 வருடங்கள் உயிர்வாழ்ந்து 1928ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இவ்வுலக ஓட்டத்தை முடித்தார்.  ரஸ்ஸல் எத்தனையோ பாடல்கள் எழுதியிருந்தபோதிலும், ‘Standing on the Promises’ பாடல் அவருக்கு உலகப்புகழ் பெற்றுத்தந்து இன்றளவும் அநேகருக்கு நம்பிக்கை அளிக்கும் பாடலாகத் திகழ்கிறது.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்
தொனியின் சத்தம் தொனிக்கும் என்றுமே,
ராஜனுக்குக் கனம் புகழ் ஓங்குக,
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்

     நிற்பேன் நிற்பேன்,
     தேவ வாக்குத்தத்தங்களை நம்பியே நான்
     நிற்பேன் நிற்பேன்,
     நான் நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.

2.    சந்தேகப் புயல் வீசிய போதிலும்,
கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்,
தேவ ஜீவ வார்த்தைகளினால் வாழ்வேன்,
நிலைநிற்பேன் வாக்குத்தத்தத்தில்.

3.    அவர் ரத்தத்தின் சுத்திகரிப்பினால்,
பரிபூர்ண விடுதலையைக் கண்டேன்,
நான் காணும் அந்நல் வாக்குத்தத்தங்களை,
நம்பி நிலை நிற்பேன் என்றுமே.

4.    மீட்பர் யேசுவின் நல் வாக்குத்தத்தத்தில்,
அவர் அன்பு பெலத்தில் நிலை நிற்பேன்,
ஆவியின் பட்டயத்தால் மேற்கொள்ளுவேன்,
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.

5.    வாக்குத்தத்தங்களினால் விழ மாட்டேன்
தூய ஆவியின் அழைப்பை நான் ஏற்பேன்
வல்ல மீட்பர் எனக்கு ஓய்வு ஈவார்

நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.

Post Comment