Sunday, September 17, 2017

இயேசு ஸ்வாமி! அருள்நாதா! (Pass me not, O gentle Savior)

இயேசு ஸ்வாமி! அருள்நாதா! கெஞ்சிக் கேட்கிறேன்
(Pass me not, O gentle Savior – S.S. 488)

’கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்’. யோவேல் 2:32

கடவுள் நம்மெல்லாருக்கும் பலவிதமான தாலந்துகளை அளித்திருக்கிறார். இவற்றை அவரது சேவையில் பயன்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.  ஆனால் அடிக்கடி இத்தாலந்துகளுடன் சில முட்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இம்முட்களைக் காரணமாகக்கொண்டு நமது தாலந்துகளைப் புதைத்து வைப்பது கடவுளின் ஈவுகளை அசட்டை செய்வதாகும்.  ஜான் மில்ட்டன் என்னும் ஆங்கிலக் கவிஞர், 44 வயதாயிருக்கையில் கண்பார்வையை இழந்து, தன் கவித்திறமையைக் கடவுளின் சேவையில் பயன்படுத்தமுடியாதவராய்த் தவித்து, ‘கடவுள் கண் பார்வையை நீக்கிவிட்டுத் தனது சேவையை எதிர்பார்க்கிறாரா?’ என சந்தேகங்கொண்டார்.  இதை அவரது ‘On his blindness’ என்னும் செய்யுளில் குறிப்பிடுகிறார்.  ஆயினும், தீவிரமாகக் கடவுள் சேவையில் ஈடுபடாமல் அமைதியாகத் தரித்திருப்பவர்களும் அவருக்கு நல்ல சேவை செய்யக்கூடும் என்பதை மேற்கூறிய செய்யுளில், ‘They also serve, who only stand and wait’ என்று எழுதுகிறார்.  உலகப் புகழ்பெற்ற, ‘Paradise Lost’ என்னும் ஆங்கிலக் காவியத்தை, மில்ட்டன் கண் பார்வை இழந்தபின்னரே எழுதினார்.  கிறிஸ்துவின் நற்செய்தியை அதிகமாகப் பரவச்செய்த அப்போஸ்தலனான பவுல் தன் உடலில் கொடுக்கப்பட்டிருந்த முள்ளைப் பொருட்படுத்தாமல், மரணம் மட்டும் ஓய்வின்றி ஊழியம் செய்தார்.  உலக சரித்திரத்தைப் பார்க்கும்போது உடலில் குறைபாடுள்ள பலர் அரிய சேவை செய்திருப்பதைக் காணலாம்.

இப்பாடலை எழுதிய பானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போது, தவறான மருத்துவ சிகிச்சையால் கண்பார்வையை இழந்தார்.  ஐந்து வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் கொண்டுபோகப்பட்டார்.  ஆனால் கண்பார்வையை சரிப்படுத்த மருத்துவரால் இயலவில்லை.  மிகுந்த அனுதாபத்துடன் அவர் இளம்பெண்ணைப் பார்த்து ‘Poor little blind girl!’ எனக்கூறினார். இவ்வார்த்தைகளைப் பானி கிராஸ்பி ஆயுள் முழுவதிலும் ஞாபகத்தில் வைத்திருந்து, கடவுளின் பார்வையில் தன் நிலை என்ன என்று சிந்திக்கலானார்.  தன்னைச் சுற்றியிருந்த மக்கள் அவ்வூரில் நடந்த பற்பல நிகழ்ச்சிகளிலும் அவரை ஒதுக்கி வைத்தனர்.  அதிக நேரம் தனிமையாக இருக்கவேண்டியிருந்ததால், தன் மனதைக் கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதுவதில் திருப்பினார்.  மற்றவர்கள் தன்னை ஒதுக்கி வைத்ததுபோல கடவுளும் தன்னை ஒதுக்கிவிடக்கூடுமோ என அவர் சந்தேகங்கொண்டு, ‘Pass me not, O gentle Saviour’ என்னும் பாடலை அதிக உணர்ச்சியோடு எழுதினார்.  இப்பாடலின் பல்லவியில், ‘While on others Thou art calling, do not pass me by’ (மற்றவர்களை அழைக்கும்போது, என்னை விட்டுவிடாதேயும்) என எழுதித் தன் மனதிலிருந்த வருத்தத்தைக் காட்டியிருக்கிறார்.

பானி கிராஸ்பி 1820ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி, அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.  அவரது பெற்றோர் மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்து ஆறு வாரம் ஆனபோது, குழந்தைக்கு ஜலதோஷம் உண்டானதால் அவ்வூரிலுள்ள மருத்துவரிடம் கொண்டுபோகவே, அவர் கடுகுக் களிம்பை இரு கண்களைச் சுற்றிலும் பூசினார்.  இதனால் கண்கள் வெந்து குருடாயிற்று.  பெண் ஐந்து வயதாயிருக்கையில் அதின் இனத்தவர் பலர் பணம் திரட்டி, நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பினார்.  ஆனால் கண்களைச் சரிப்படுத்த அவரால் முடியவில்லை.  எனவே பன்னிரண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.  அங்கு நன்றாகக் கற்றுத்தேறி, 1847 முதல் பதினொரு ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1858’ல் இப்பள்ளியிலிருந்து விலகி, தம்மைப் போலக் கண்பார்வையற்ற அலெக்ஸாண்டர் வான் ஆல்ஸ்டைன் என்னும் சங்கீத நிபுணரை மணந்தார்.

பானி கிராஸ்பி அம்மையார் இளவயதிலிருந்தே செய்யுள்கள் எழுதுவதில் அதிகத் திறமை காட்டினார்.  அவர் எட்டு வயதாய் இருக்கையில் தமது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் அவரே முதல் இடத்தைப் பெற்றார்.  அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களை, ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்தில் காணலாம்.  அவர் எழுதிய இதர பாடல்களில் நாம் பாடி வருபவை:

v  போற்றும் போற்றும், புண்ணிய நாதரை (பாமாலை 267)
v  இயேசுவே கல்வாரியில் என்னை (பாமாலை 333)
v  இயேசுவின் கைகள் காக்க (பாமாலை 353)
v  இயேசுவின் நற்செய்தி சொல்வீர்’ (S.S. 43)
v  பாவி, உன் மீட்பர் கரிசனையாய்’ (S.S. 396)
v  முயல்வோம், முயல்வோம் (S.S. 751)
v  இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன் (S.S. 873)

பானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 12ம் தேதி தமது 95வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இயேசு ஸ்வாமி அருள் நாதா
கெஞ்சிக் கேட்கிறேன்
பாவியேனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்

     இயேசு ஸ்வாமி
     கெஞ்சிக் கேட்கிறேன்
     பாவியேனைக் கைவிடாமல்
     சேர்த்துக் கொள்ளுமேன்

2.    கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசர் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்

3.    தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன்.

4.    தூய இரத்தத்தாலே என்னைச்
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்.

Pass me not, O gentle Savior 

Post Comment

Friday, September 1, 2017

மேலோக வரலாறு (I love to tell the Story)

மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்
(I love to tell the story)

அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். சங் 66:16

ஆண்டவர் பரத்துக்கேறுமுன் தமது சீஷருக்குக் கொடுத்த கட்டளை, ‘நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ என்பதாகும்.  அந்நாள் முதல் கடந்த சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சுவிசேஷகர்கள் உலகமெங்கும் சுற்றித் திரிந்து, ஆண்டவரின் அன்பைக் குறித்துப் போதித்ததால், லட்சக்கணக்கான மக்கள் அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.  ஆண்டவரின் அன்பை நமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து அதைக்கூறுவதும், வெறுமனே சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும் வேறு.  ஆண்டவரின் அன்பைத் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து, அதின் விளைவாக அந்த அன்பைக் கூறி அறிவிக்கிற சுவிசேஷகர்கள் எத்தனைபேர் என்பதை சிந்தித்துப் பார்ப்போமாக.

Katherine Hankey
இப்பாடலை எழுதிய காத்ரீன் ஹாங்கி (Katherine Hankey), இளவயதிலேயே ஆண்டவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பள்ளியில் மாணவியாக இருக்கும்போதே, சிறுவர்களுக்க்கு ஓய்வுநாட்பள்ளியில் போதிக்க ஆரம்பித்தார்.  இரட்சகரின் அன்பைப் பூரணமாக உணர்ந்திருந்தவராதலால், அதைப் பிறருக்குச் சொல்ல மிகவும் ஆவலாயிருந்தார்.  ஆதலால், முதலில் தான் பிறந்த ஊரிலும், பின்பு இருண்ட கண்டமென அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவிலும், அதன் பின்னர் இங்கிலாந்திலும் ஆண்டவரின் அன்பை ஆவலோடு கூறினார்.  நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போதும் அங்கிருந்த நோயாளிகளுக்குப் போதித்தார். 
William G. Fischer
அவர் முப்பத்திரண்டு வயதாயிருக்கையில் வாழ்க்கையில் தனக்கிருந்த ஒரே ஆவலை, ‘மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்’ என்னும் பாடலாக எழுதினார். இப்பாடல் முழுவதிலும் அவரது ஒரே ஆவலை மீண்டும் மீண்டும் கூறி, ‘என் ஆசை, ஆவல் இதே, வேறொன்றும் ஆசியேன்’ என்று எழுதுகிறார். (சில மொழிபெயர்ப்புகளில் ”மேலோக தெய்வ செய்தி ஆவலாய் கூறுவேன்” என்று கொடுக்கப்பட்டிருக்கிறது).
William G. Fischer (1835-1912) என்பவர் இப்பாடலுக்கான ராகத்தை இயற்றினார்.

காத்ரீன் ஹாங்கி அம்மையார் 1834ம் ஆண்டு இங்கிலாந்தில் கிலாபம் என்னுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தை செல்வந்தரான ஒரு வங்கி முதலாளி.  அவர், ‘கிலாபம் நற்செய்திக் குழு’ என்னும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த நற்பணியாளர்.  தன் மகளை இளவயதிலேயே கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி பயில அனுப்பி, நல்ல ஆவிக்குரிய அனுபவம் பெறச் செய்தார்.  பள்ளியில் மாணவியாயிருக்கும் காலத்திலேயே இளஞ்சிறுவர்களுக்கான ஓய்வுநாட் பள்ளிகளில் போதித்தார்.  மேலும், தன் உடன் மாணவிகளிடையே வேதம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களுடன் சேர்ந்து வேத ஆராய்ச்சிக்குழு ஒன்றை ஏற்படுத்தினார்.  தன் ஊரில் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு வேதம் போதிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.  ஒருமுறை, நோய்வாய்ப்பட்ட தன் சகோதரனை அழைத்து வருவதற்காக ஆப்பிரிக்கா செல்ல நேரிட்டது.  அங்கிருந்த மக்களின் பரிதாபமான ஆத்தும நிலையைக் கண்டவுடன் அம்மையாருக்கிருந்த சுவிசேஷ வாஞ்சை பன்மடங்கு அதிகரித்தது.  சிலகாலம் அங்கேயே உழைத்தபின், தன் தாய்நாடு திரும்பி, மிகவும் ஆர்வத்தோடு ஆண்டவரின் அன்பைக் கூறி அறிவித்தார்.  மேலும், பல பாடல்களும், கிறிஸ்தவ நூல்களும் எழுதி, அவற்றின்மூலம் கிடைத்த வருமானத்தை சுவிசேஷ ஊழியத்துக்காகவே செலவிட்டார்.  தன் வாழ்க்கையின் இறுதியில் அவர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் படுத்திருக்கும்போதும் அங்கிருந்த மற்ற நோயாளிகளுக்கு ஆண்டவரின் அன்பைக் கூறினார்.


காத்ரீன் ஹாங்கி அம்மையார் 1911ம் ஆண்டு, தனது 77வது வயதில் லண்டன் மாநகரில் மறுமைக்குட்பட்டார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.    மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்
இயேசுவும் மகிமையும் கிறிஸ்துவும் உள்ளன்பும்
மெய்யென்று அறிவேன் நான் சொல்ல ஆசிக்கின்றேன்
என் ஆவல் பூர்த்தியாகும் நேசர் மா அன்பினால்

     மண்ணில் என் வாஞ்சை இயேசு, வரலாறு சொல்வதே
     விண்ணில் இயேசுவும் அன்பும், பாடும் பொருள் என்றும்

2.    அற்புத தெய்வ செய்தி சொல்ல வாஞ்சிக்கிறேன்
கனவு நினைவிற்கும் எட்டா அதிசயம்
நான் பெற்ற நன்மை பல, சொல்ல ஆசிக்கின்றேன்
இந்த நன்மைக்காகவே, இதொன்றே உன் தேவை.

3.    சொல்ல சொல்ல இன்பமே, தெவிட்டாத வாஞ்சை,
சொல்லும் போதெல்லாம் இன்பம் அதிசய அன்பு;
ஆத்ம ரட்சிப்பின் செய்தி பலர் கேட்டதில்லை
வேத தூய சத்தியம் சொல்ல வாஞ்சிக்கிறேன்

I love to tell the Story

Post Comment