Wednesday, July 6, 2016

பாமாலை 359 - அன்பே விடாமல் சேர்த்து

பாமாலை 359 – அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
(O Love that will not let me go)

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும்,  அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்’. யோபு 13 : 15

பக்தன் யோபுவின் சரித்திரம் நமக்குப் புதிதானதல்ல. அவன் தன் வாழ்க்கையில் எத்தனையோ விதமான இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. சாத்தான் அவனைப் பலவிதமான சோதனைகளுக்குட்படுத்தி, அவனுடைய விசுவாசத்தைப் பரீட்சை பார்த்தான்.  யோபுவின் வாழ்க்கையில் அவனுக்கு சந்தோஷத்தை உண்டாக்கின எல்லாவற்றையும் அவன் இழக்க நேரிட்டது.  அவனுடைய மனைவியும் சிநேகிதரும் அவனை கடவுளுடைய பாதையிலிருந்து விலகத்தூண்டினர்.  ஆயினும் யோபு மறுமொழியாகச் சொன்னது, ‘அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்’.  நமது வாழ்விலும், சந்தோஷம் காலங்களிலும் கடவுளிடம் அன்பும், நம்பிக்கையும் கொள்வது சிரமமல்ல.  ஆனால் இன்னல்களும் இடுக்கண்களும் நம்மை நெருக்கும்போது, ஆண்டவரின் அன்பை மறந்துவிடாமல், அவரும் நம்மோடு அனுதாபப்படுகிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்வோமாக.

George Matheson
Pic Thanks : Wiki
இப்பாடலை எழுதிய ஜார்ஜ் மாத்தீசன் (George Matheson) என்பவர் குருடனாயிருந்து, பல மன வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது இதை எழுதினார்.  அவர் ஒரு பெண்ணைக் காதலித்து, மணநாள் நெருங்கும்போது அவர் கண்பார்வையை இழந்ததால் அப்பெண் அவரை மணந்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மனவேதனையால் அவர் இப்பாடலை எழுதினாரென்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இப்பாடலின் முதல் கவியும், மூன்றாவது கவியும் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் சிலகாலத்திற்கு முன் அவரது தங்கையான குமாரி மாத்தீசனைக் கேட்டபோது, அவர் இளவயதிலேயே மங்கின பார்வையுடையவராயிருந்து, சுமார் பதினெட்டு வயதில் கண்பார்வை இழந்ததாகவும், அவர் நாற்பது வயதாயிருக்கையில்தான் இப்பாடல் எழுதப்பட்டது என்றும் கூறியுள்ளார்.  ஆதலால் மேற்கூறிய கதை வெறும் கட்டுக்கதை என்பது திண்ணம்.  எனினும் தனக்கு அருமையான ஒருவரது மரணத்தாலும், மற்றும் சில காரணங்களாலும், அதிகமான வேதனையடைந்து, அதை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில், திடீரென இப்பாடல் அவர் மனதில் உருவானதாகவும், சில நிமிடங்களில் இதை எழுதி முடித்ததாகவும் அவரே கூறியுள்ளார்.

ஜியார்ஜ் மாத்தீசன் 1842ம் ஆண்டு, மார்ச் மாதம் 27ம் தேதி, ஸ்காட்லாண்டு நாட்டில், கிளாஸ்கோ (Glasgow, Scotland) நகரில் தனவந்தரான ஒரு வியாபாரியின் மகனாகப் பிறந்தார்.குழந்தைப் பருவத்திலிருந்தே மங்கின பார்வையுடையவராயிருப்பினும், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் (University of Glasgow) பயின்று, 1862ம் ஆண்டில், ‘எம்.ஏ’ பட்டம் பெற்றார். 1866ல் கிளாஸ்கோ நகரில் சாண்டிபோர்ட் ஆலயத்தில் உதவிகுருவாகத் தம் ஊழியத்தை ஆரம்பித்தார்.  இரு ஆண்டுகளுக்குப்பின், இன்னிலான் என்னும் ஊரில் ஒரு தனிச்சபைக் குருவாக நியமிக்கப்பட்டார். அவரது பிரசங்கத்திறமை பரவவே, 1886ல் எடின்பரோ நகரில் சுமார் இரண்டாயிரம் அங்கத்தினர் கொண்ட தூய பர்னார்டு ஆலயத்தின் (St. Bernard's Parish Church) குருவாக நியமனம் பெற்று, பதிமூன்று ஆண்டுகள் அங்கு ஊழியம் செய்தார். கண்பார்வை இல்லாததால் அவர் செய்ய ஆசித்த வேத ஆராய்ச்சிகளைச் செய்ய முடியவில்லை.  ஆயினும், வேதசாஸ்திர சம்பந்தமாக அவர் பதினேழு சிறந்த புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது வேத சாஸ்திரத்திறமைக்காக பண்டிதர் (Doctor of Divinity) பட்டமும், வேறு பல பட்டங்களும் பெற்றார்.

Albert Lister Peace
‘அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்’ என்ற பாடல் 1882ல் மேற்கூறிய சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டது.  இப்போது இது பல பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, சங்கீதப் பண்டிதர் டாக்டர். ஆல்பர்ட் பீஸ் (Albert Lister Peace) என்பவரால் எழுதப்பட்ட ‘St. Margaret’ என்னும் அழகிய இராகத்தில் பாடப்பட்டு வருகிறது.

அவர் 1906ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 28ம் தேதி, தமது 64ம் வயதில், ஸ்காட்லாண்ட் நாட்டில் போர்த் நகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.

2.            ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

3.            பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
‘விடியுங்காலை களிப்பாம்!’
உம் வாக்கு மெய் மெய்யே.

4.            குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.

O Love that wilt not let me go

Post Comment

No comments:

Post a Comment