Friday, September 14, 2018

பாமாலை 274 - ஊதும் தெய்வாவியை (Aylesbury)

பாமாலை 274 – ஊதும் தெய்வாவியை
(Breathe on me, Breath of God)

’சுவாசம்’ அல்லது ‘ஜீவசுவாசம்’ எனும் பதம் கிறிஸ்தவ வாழ்வில் எப்போதும் ஒரு முக்கிய அங்கம்வகித்து வந்திருக்கிறது. ஆதியிலே “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” என்று ஆதியாகமம் 2:7ல் நாம் வாசிக்கிறோம். தேவன் தம் படைப்பின் கிரியைகளில் விளங்கப்பண்ணினதில் மகா அதிசயமான ஒன்று இந்த ‘ஜீவசுவாசம்’.

‘ஜீவசுவாசம்’ அல்லது ‘சுவாசம்’ என்பது ’பரிசுத்த ஆவியானவரை’க் குறிக்கும் சொல்லாகவும் விளங்கிவந்திருக்கிறது.  ”பரிசுத்த ஆவியானவர்” “சுவாசம்” எனும் இரு சொற்களையும் குறிப்பிட, கிரேக்க மொழியில் ‘pneuma’ என்ற ஒரே சொல்லும், லத்தீன் மொழியில் ‘spiritus’ என்ற ஒரே சொல்லும் உபயோகிக்கப்படுகிறது.

Edwin  Hatch
பரிசுத்த ஆவியானவரை தம் படைப்பாகிய மனிதனுள் ஆண்டவர் ஜீவசுவாசமாக ஊதி உயிர்ப்பூட்டிய நிகழ்வின் அற்புதத்தை எட்வின் ஹேட்ச் (Edwin  Hatch - 1835-89) எனும் போதகர், ’ஊதும் தெய்வாவியை’ எனும் இந்த அழகிய பாடலாக உருவாக்கினார். 1878’ம் ஆண்டு வெளியான ‘Between Doubt and Prayer’ எனும் ஒரு துண்டுப் பிரசுரத்தில் இப்பாடல் முதன்முதலில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

ஆண்டவரைப் பற்றி அறிந்திராத பெற்றோருக்குப் பிறந்த எட்வின், தம் பள்ளிப்படிப்பை பர்மிங்ஹாமில் உள்ள எட்வர்ட் பள்ளியிலும் (King Edward School, Birmingham) தம் கல்லூரிப் படிப்பை ஆக்ஸ்ஃபோர்டிலும் (Pembroke College, Oxford) முடித்தார். 

கல்லூரிக் காலத்தில் எட்வினின் நண்பர்கள் ஓவியம், கவிதைகள் என்று ஆர்வம் நிறைந்தவர்களாய் இருந்தபோது அவர்களுடன் எட்வினும் நிறைய விமர்சனங்கள் (Reviews), நாளிதழ் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் காட்டினார்.  கல்லூரிப் படிப்பு முடிந்து அவருடைய நண்பர்கள் கலை மற்றும் இலக்கியத் துறையில் ஆர்வம்கொண்டு செல்ல, எட்வின் Church of England’ல் போதகராக அபிஷேகம் பெற்று, லண்டனின் கிழக்குப் பகுதியில் இருந்த தேவாலயம் ஒன்றில் ஆயராகப் பணிபுரிந்தார்.

பின்னர் 1859 முதல் 1867வரை கனடாவின் Trinity College’ல் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், 1867ல் இங்கிலாந்துக்குத் திரும்பி, Oxford St. Mary’s Hall’ன் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். மேலும் Rector of Purleigh in Essex, University Reader in Ecclesiastical History என்று கல்வித்துறையின் பல்வேறு உயர் பதவிகளைக் கண்டார். இத்தனை பெரும்பதவிகள் வகித்தும், எட்வின், மிகவும் எளிமையான, பக்திநிறைந்த ஒரு மனிதராகத் திகழ்ந்தார்.

‘ஊதும் தெய்வாவியை’ நம் திருச்சபைகளில் மிக அரிதாகவே பாடப்படுகிறது. ‘Aylesbury’ போன்ற ராகத்தில் இப்பாமாலை பாடப்பட்டாலும் ‘Carlisle’ எனும் ராகம் எட்வின் எழுதியுள்ள வரிகளுக்கு மிகப் பொருத்தமான ஒரு ராகமாகக் கருதப்படுகிறது.  இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ‘Carlisle’ எனும் ராகத்தை இயற்றியவர் சார்ல்ஸ் லாக்கர்ட் (Charles Lockhart 1745-1815) ஆவார்.


பதிவு தகவல்கள் : The Daily Telegraph Book of Hymns by Ian Bradley

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஊதும் தெய்வாவியை
புத்துயிர் நிரம்ப
நாதா என் வாஞ்சை செய்கையில்
உம்மைப் போல் ஆகிட

2.    ஊதும் தெய்வாவியை
தூய்மையால் நிரம்ப
உம்மில் ஒன்றாகி யாவையும்
சகிக்க செய்திட

3.    ஊதும் தெய்வாவியை
முற்றும் ஆட்கொள்ளுவீர்
தீதான தேகம் மனத்தில்
வானாக்னி மூட்டுவீர்

4.    ஊதும் தெய்வாவியை
சாகேன் நான் என்றுமாய்
சதாவாய் வாழ்வேன் உம்மோடு
பூரண ஜீவியாய்

Post Comment

No comments:

Post a Comment