Wednesday, May 28, 2014

பாமாலை 238 - இயேசு எந்தன்

பாமாலை 238 – இயேசு எந்தன் நேசரே
(Jesus loves me this I know)


சிறுவர்களை இயேசுவின் அன்பை நோக்கி இழுத்த பாடல்களில் இப்பாடல் மிகவும் சிறப்புப் பெற்றது.  இப்பாடலை அன்னா பார்ட்லெட் வார்னர் (Anna Bartlett Warner) 1860ம் ஆண்டு, தன் 40வது வயதில் எழுதினார்.

Anna Bartlett Warner
அன்னாவின் சகோதரி சூசன் (Susan Warner) ஒரு சிறந்த எழுத்தாளர்.  அந்நாட்களில் மிகவும் புகழ்பெற்ற ‘சொல்லி முத்திரையிடு’ (Say and Seal) என்ற நாவல் புத்தகத்தை அவர் எழுதினார்.  அதின் கதாபாத்திரங்களான லிண்டன், மரணத்துடன் போராடும் சிறுவன் ஜானி பாக்ஸை ஆறுதல்படுத்த இப்பாடலைப் பாடுவதாக சூசன் எழுதி, அப்பாடலை இயற்றும் பொறுப்பைத் தன் சகோதரியிடம் கொடுத்தார்.  இவ்வாறு உருவான இப்பாடல், இன்றும் உலகின் பல்வேறு சிறுவர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக விளங்குகிறது.

கல்வியில் சிறந்த வார்னர் சகோதரிகள் பக்தி நிறைந்த வாழ்க்கை நடத்தி வந்தனர்.  சிறந்த வழக்கறிஞரான இவர்கள் தந்தையின் மரணத்திற்குப்பின், தங்களது இலக்கியப் பணிகளின் மூலம் சமூக சேவையையும் நற்செய்திப்பணியையும் செய்து வந்தனர்.  நியூயார்க்கின் ஹட்சன் நதிக்கரையில் இருந்த இவர்களின் இல்லத்துக்கருகில் அமைக்கப்பட்ட அமெரிக்க படை அதிகாரிகளின் பயிற்சிப்பள்ளியில் படிக்கும் வாலிப வீரர்களுக்குத் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஞாயிறு பள்ளி நடத்தி, அவர்களின் ஆவிக்குரிய தேவைகளை சந்தித்து வந்தார்கள்.

எளிமையான வார்த்தைகளுடன் இயேசுவின் அன்பைத் தெளிவாய் விளக்கும் இப்பாடலை, பல மிஷனரிகள் தங்கள் பணித்தளங்களின் புது விசுவாசிகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் முதல் பாடலாக உபயோகித்தனர்.  எனவே, இப்பாடல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

William Batchelder Bradbury
இப்பாடலுக்கு டாக்டர் வில்லியம் பிராட்பரி (William Batchelder Bradbury) இனிமையான ராகம் அமைத்து அதின் பல்லவியையும் (Chorus) (Yes, Jesus loves me, Yes, Jesus Loves me) 1861ம் ஆண்டு சேர்த்தார்.  பல பாடல் புத்தகங்களை வெளியிட்டுள்ள இவர், இப்பாடலை, 1862ம் ஆண்டு தனது ‘தங்க மழை’ என்ற பாடல் புத்தகத்தில் அறிமுகம் செய்தார்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒரேவித சீருடை அணிந்து, இணைந்து அழகாகப் பாடும் இன்னிசை நிகழ்ச்சிகளை வருடந்தோறும் நடத்திய பெருமை இவரைச் சேரும்.

தகவல்கள் நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’, அமைதி நேர ஊழியங்கள், சென்னை 42.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.            இயேசு எந்தன் நேசரே
கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.

     இயேசு என் நேசர்,
     இயேசு என் நேசர்,
     இயேசு என் நேசர்,
     மெய் வேத வாக்கிதே.

2.    என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்,
எந்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.

3.    பலவீனம் நோவிலும்
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.

4.    எந்தன் மீட்பர் இயேசுவே,
தங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.
Jesus Loves me this I know

Post Comment

No comments:

Post a Comment