Saturday, May 24, 2014

பாமாலை 253 - கர்த்தாவே யுகயுகமாய் (St. Anne)

பாமாலை 253 – கர்த்தாவே யுகயுகமாய்
(O God, our help in ages past)

’ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்’ சங்கீதம் 90:1

சங்கீதப் புத்தகத்திலுள்ள சங்கீதங்களில், 90ம் சங்கீதம் தனிச்சிறப்பு வாய்ந்தது.  இச்சங்கீதம் மிக நெருக்கடியான காலங்களில் வாசிக்கப்படுகிறது. யுத்த காலங்களிலும், பெருவாரியான வியாதி காலங்களிலும், பஞ்ச காலங்களிலும் இது வாசிக்கப்படுகிறது.  மேலும், ஆண்டு இறுதி ஆராதனைகளிலும், அடக்க ஆராதனைகளிலும், இதை வாசிக்கிறோம். மோசே இஸ்ரவேலைரை எகிப்து நாட்டிலிருந்து கானான் நாட்டுக்கு வழி நடத்தும்போது அவர்கள் செய்த பாவத்தினால் வெள்ளம்போல வாரிக்கொண்டு போகப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் இச்சங்கீதம் மோசேயால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இங்கிலாந்தில் ஆன் மகாராணி (Queen Anne) ஆட்சி செய்து வந்தார். இவர் இரக்க சிந்தை உள்ளவராதலால் மக்களால் வெகுவாக நேசிக்கப்பட்டார் அக்காலங்களில், ஒவ்வொரு அரசன் அல்லது அரசியின் ஆட்சியில் நாட்டின் நிலைமை எவ்வாறிருக்குமெனத் திட்டமாகச் சொல்வதற்கில்லை.  ஆன் மகாராணிக்குக் குழந்தைகள் இல்லை.  இவரது ஆட்சியின் இறுதியில், இவருக்குப்பின் ஜெர்மன் நாட்டிலுள்ள ஹானோவர் பிரபு (Elector of Hanover) ஆட்சிக்கு வருவதாக இருந்தது.  இவர் அயல் நாட்டவராதலால், இங்கிலாந்து மக்களிடம் எவ்வாறு நடந்துகொள்வாரோ என்ற அச்சமும், மத சம்பந்தமாகப் பல பிரிவுகள் இருந்தமையால், புதிய அரசர் எவ்வாறு நடந்துகொள்வாரோ என்ற சந்தேகமும் மக்களை வெகுவாகக் கலங்கச்செய்தன. இக்காலத்தில் 90ம் சங்கீதம் ஆலய ஆராதனைகளிலும், மற்றும் வழிபாடுகளிலும் அதிகமாக வாசிக்கப்பட்டது. அக்காலத்தில் பாடல்கள் பல எழுதிக்கொண்டிருந்த ஐசக் வாட்ஸ் (Isaac Watts) என்னும் சுய ஆளுகைச் சபைப் போதகர், இச்சங்கீதத்தை மக்கள் அதிகமாகப் பாடும்படி ஒரு பாடலாக எழுதினார். இப்பாடலே ‘கர்த்தாவே யுகயுகமாய்’ என்னும் பாடலாகும்.

Isaac Watts
இப்பாடலை எழுதிய ஐசக் வாட்ஸ் பண்டிதர்1674ம் ஆண்டு ஊலை மாதம் 14ம் தேதி, இங்கிலாந்தில் சௌதாம்டன் (Southampton) நகரில், தமது பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆசிரியர். இவரது பாட்டனார் புகழ்பெற்ற கப்பற்படைத் தலைவரான பிளேக் (Admiral Blake) என்பவரின் கீழ் பணியாற்றிய ஒரு மாலுமியாவார்.  பாட்டனார் பட்டயத்தால் சாதித்ததை விட வாட்ஸ் தமது பேனாவால் கிறிஸ்தவ உலகிற்கு அரிய காரியங்களை சாதித்துள்ளார்.  அவரது பதினாறாம் வயதில் சுய ஆளுகை சபையை சேர்ந்த ஒரு திருமறைப் பயிற்சி நிலையத்தில் பயின்று, தமது இருபத்து நான்காம் வயதில் லண்டன் மாநகரில் ஒரு சுய ஆளுகை சபையின் குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தார். ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின், தன் உடல்நிலை குன்றியதால், திருப்பணியை விட்டுத் தமது நண்பர் ஸர் தாமஸ் அபினியுடன் ஆயுள் முழுவதும் தங்கியிருந்தார்.

வாட்ஸ் இருபது வயதாயிருக்கையில் சௌதாம்டன் நகரிலுள்ள ஒரு சிற்றாலயத்தில் ஆராதனைக்குச் சென்றார். அச்சபையில் சங்கீதங்களுடன், பார்ட்டன் போதகர் இயற்றிய சில ஞானப்பாடல்களும் பாடப்பட்டு வந்தன.  இப்பாடல்களில் வாட்ஸ் அதிருப்தியடைந்து, வீட்டுக்கு வந்தவுடன் இதைத் தன் தந்தையிடம் கூறினார். அவர், ‘அப்படியானால் வாலிபனே, இதைவிட மேலான பாடல்களை நீ எழுதலாமே?’ எனக்கூறினார். வாட்ஸ் இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, பாடல்கள் எழுத ஆரம்பித்தார்.  அவர் எழுதிய பாடல்களை, “Hymns and Spiritual Songs’ என்னும் பெயருடன் வெளியிட்டார். அவர் நானூற்று ஐம்பத்து நான்கு பாடல்கள் எழுதியுள்ளார். அப்பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பவை:

·         என் அருள் நாதா இயேசுவே – பாமாலை 103
·         வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் – பாமாலை 168
·         பகலோன் கதிர் போலுமே – பாமாலை 212

William Croft
1719ல் எழுதப்பட்ட, ‘கர்த்தாவே யுகயுகமாய்’ என்னும் பாடல், ‘கிறிஸ்தவ சபையின் தேசிய கீதம்’ எனப்போற்றப்படுகிறது. இங்கிலாந்தில் எல்லா தேசிய நிகழ்ச்சிகளிலும், இது பாடப்படுகிறது. மேலும், யுத்த காலங்களிலும், மக்கள் மனக்கலக்கம் அடைந்து தவிக்கும்போதும், ஆண்டு இறுதி ஆராதனைகளிலும் இது தவறாமல் பாடப்படுகிறது.  இப்பாடலுக்கான ராகத்தை வில்லியம் க்ராஃப்ட் (William Croft) என்பவர் அமைத்துள்ளார்.

வாட்ஸ் பண்டிதர் ‘கிறிஸ்தவப் பாடல்களின் பிதா’ என அழைக்கப்படுகிறார். அவர் 1748ம் ஆண்டு, நவம்பர் மாதம் 25ம் தேதி, தமது 75ம் வயதில் காலமானார். அவரது ஞாபகார்த்தமாக, லண்டன் மாநகரிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஆபி என்னும் தேசியப் பேராலயத்தில் ஒரு ஞாபகச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

Descant

Descant with Soprano

Unison with Descant


Sheet music (with Descant)



1.            கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்,
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.

2.    உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.

3.    பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.

4.    ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே,
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.

5.    சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.

6.    கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.

O God, our help in Ages past

Post Comment

2 comments: