Friday, February 17, 2017

பாமாலை 11 - மகா அதிசயங்களை

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மகா அதிசயங்களைச்
செய்தென்னைப் பூரிப்பித்து,
உபத்திரவத்தின் பாரத்தை
இரக்கமாய்க் கழித்து,
ரட்சிக்கிற தயாபரர்
இஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

2.    கர்த்தாதி கர்த்தா, தேவரீர்
யாவற்றையும் நன்றாக
சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர்
என்றும்மைப் பணிவாக
விண் மண் கடல் ஆகாசத்து
சேனைத் திரள்கள் போற்றுது;
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

3.    ஆ, கேளும் என்தன் துன்பத்தில்
கர்த்தாவைக் கெஞ்சிவந்தேன்
அப்போது ஏற்ற வேளையில்
மகா ரட்சிப்பைக் கண்டேன்,
இதற்கென் நாவே, கீதம்சொல்
என்னோடெல்லோரும் பாடுங்கள்,
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

4.    நான் தேவரீரை என்றைக்கும்
மகிழ்ச்சியாய்த் துதிப்பேன்;
நான் உம்மை நித்தநித்தமும்
புகழ்ந்து ஸ்தோத்திரிப்பேன்,
என் ஆத்துமமும் தேகமும்,
கர்த்தாவே, உம்மைப் போற்றவும்;
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

5.    மெய்மார்க்கத்தாரே, கர்த்தரை
துதித்துக் கொண்டிருங்கள்,
அவருடைய நாமத்தை
எந்நேரமும் தொழுங்கள்.
பொய்த் தேவர் செவிடூமையர்,
கர்த்தா கர்த்தாவே ஆண்டவர்,
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

6.    நாம் தெய்வ சன்னிதியிலே
மகா மகிழ்ச்சியாக
வந்துன்னத கர்த்தாவையே
வணக்கம் செய்வோமாக
பராபரனைப் போலே யார்,
யாவற்றையும் நன்றாக்கினார்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

Post Comment

Wednesday, February 15, 2017

பாமாலை 350 - பிளவுண்ட மலையே (Toplady)

பாமாலை 350 – பிளவுண்ட மலையே
(Rock of ages cleft for me)

‘நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்’. யாத் 33:22

‘நிழல்போன்ற வாழ்விலும், கண்ணைமூடும் சாவிலும்” புகலிடமாக விளங்கும் கற்பாறையே நமக்காகப் பிளவுண்ட கிறிஸ்து.  இந்தப் பாடலை எழுதியவர், அகஸ்டஸ் டாப்லேடி என்னும் போதகர்.  அவர் குருத்துவ ஊழியம் செய்த பிளாக்டன் கிராமத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் இயற்கை அழகு நிறைந்த ஒரு புல்வெளி இருந்தது.  அதில் புதர்களும், பாறைகளும் உண்டு.  போதகர் அடிக்கடி அங்கு கால்நடையாக உலாவச் செல்வது வழக்கம்.  ஒருநாள் அங்கு சென்றிருக்கையில், திடீரென்று புயலோடு கூடிய மழை உண்டாயிற்று. ஒதுங்குவதற்கு வழியில்லாமல் அங்குமிங்கும் பார்க்கையில் அவர் ஒரு பெரிய பாறையில் செங்குத்தான ஒரு பிளவைக்கண்டு, அதில் புயல் ஓயும்வரை ஒதுங்கி நின்று பத்திரமாகக் காப்பாற்றப்பட்டார்.  எப்போதும் ஆவிக்குரிய விஷயங்களையே சிந்தித்துக்கொண்டிருந்த நம் போதகருக்கு நேரிட்ட இந்நிகழ்ச்சி, பூலோகத்தில் நமக்கு நேரிடும் துன்பங்களுக்கு நாம் தப்பி ஒதுங்க நமது ஆண்டவர் புகலிடமாக விளங்குகிறார்’ என்னும் உணர்ச்சியை எழுப்பியது.  அப்போது, ‘பிளவுண்ட மலையே’ என்னும் பாடல் அவர் மனதில் உருவாயிற்று.  புயல் ஓய்ந்தவுடன் கீழே கிடந்த ஒரு சீட்டில் (Playing Card) இப்பாடலின் முதல் கவியை எழுதினார்.  இந்த சீட்டு இன்னமும் அமெரிக்காவில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது.  வீட்டுக்குச் சென்றவுடன் இப்பாடலின் மீதிக் கவிகளையும் எழுதி முடித்தார்.

     விக்டோரியா மகாராணியாரின் கணவரான ஆல்பர்ட் கோமகன் இப்பாடலை பெரிதும் பாராட்டி, உள்ளத்தைக் கவரும் பாடல் எனக் கூறியுள்ளார்.  தமது மரணப் படுக்கையிலும் இதை அடிக்கடி பாடி, ‘இக்கடைசி நேரத்தில் எனது லௌகீக மகிமைகளையே நான் சார்ந்திருந்தேனாகில் மிகவும் எளியவனாவேன்’ என்றும், இப்பாடல் தனக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்தது என்றும் கூறினார்.

Augustus Toplady
     இதை எழுதிய அகஸ்டஸ் டாப்லேடி என்பவர், 1740ம் ஆண்டு, நவம்பர் மாதம் 4ம் தேதி, இங்கிலாந்தில் பர்ன்ஹம் என்னுமிடத்தில் பிறந்தார்.  அவரது தந்தை ஆங்கிலப்படையில் உயர் பதவியில் இருந்து, சண்டையில் மாண்டார்.  தாயாரின் பராமரிப்பில் மகன் முதலில் லண்டன் மாநகரிலும், பின்னர் டப்ளின் நகரிலும் கல்வி பயின்று, ’எம்.ஏ.’ பட்டம் பெற்றார்.  1762ல் அவர் ஆங்கிலத் திருச்சபையில் குருவாக அபிஷேகம் பெற்று, புரோடன்பெரி என்ற நகரில் ஊழியம் செய்தார்.  ஆரம்பத்தில் அவர் மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியுடன் நட்புகொண்டிருந்து, பின்பு இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு உண்டானதால், பிரசங்க பீடத்திலிருந்து வெஸ்லியின் போக்கைக் கண்டித்தார்.  பிரசங்கம் செய்வதில் அதிக ஊக்கமும் திறமையுமுள்ளவர்.  எனினும் உடல் பலவீனமாயிருந்ததால் அதிக வேலை காரணமாக, 1778ம் ஆண்டு, தனது 38வது வயதிலேயே காலமானார்.

     ’பிளவுண்ட மலையே’ என்னும் பாடல் 1776’ல் எழுதப்பட்டது.  அநேக பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பல இனிய ராகங்களில் உலகமெங்கும் பாடப்பட்டு வருகிறது.  இதைத் தவிர அவர் வேறு பாடல்களும் எழுதியுள்ளார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்.


2.    எந்தக் கிரியை செய்துமே
உந்தன் நீதி கிட்டாதே
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே

3.    யாதுமற்ற ஏழை நான்
நாதியற்ற நீசன் தான்
உம் சிலுவை தஞ்சமே
உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன்
தூய்மையாக்கேல் மாளுவேன்

4.    நிழல் போன்ற வாழ்விலே
கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில்
நடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே
Rock of Ages

Post Comment