Monday, April 22, 2019

பாமாலை 274 – ஊதும் தெய்வாவியை (Trentham)

பாமாலை 274 – ஊதும் தெய்வாவியை
(Breathe on me, Breath of God)

’சுவாசம்’ அல்லது ‘ஜீவசுவாசம்’ எனும் வார்த்தை கிறிஸ்தவ வாழ்வில் எப்போதும் ஒரு முக்கிய அங்கம்வகித்து வந்திருக்கிறது. ஆதியிலே “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” என்று ஆதியாகமம் 2:7ல் நாம் வாசிக்கிறோம். தேவன் தம் படைப்பின் கிரியைகளில் விளங்கப்பண்ணினதில் மகா அதிசயமான ஒன்று இந்த ‘ஜீவசுவாசம்’.

‘ஜீவசுவாசம்’ அல்லது ‘சுவாசம்’ என்பது ’பரிசுத்த ஆவியானவரை’க் குறிக்கும் சொல்லாகவும் விளங்கிவந்திருக்கிறது.  ”பரிசுத்த ஆவியானவர்” “சுவாசம்” எனும் இரு சொற்களையும் குறிப்பிட, கிரேக்க மொழியில் ‘pneuma’ என்ற ஒரே சொல்லும், லத்தீன் மொழியில் ‘spiritus’ என்ற ஒரே சொல்லும் உபயோகிக்கப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவரை தம் படைப்பாகிய மனிதனுள் ஆண்டவர் ஜீவசுவாசமாக ஊதி உயிர்ப்பூட்டிய நிகழ்வின் அற்புதத்தை எட்வின் ஹேட்ச் (Edwin  Hatch - 1835-89) எனும் போதகர், ’ஊதும் தெய்வாவியை’ எனும் இந்த அழகிய பாடலாக உருவாக்கினார். 1878’ம் ஆண்டு வெளியான ‘Between Doubt and Prayer’ எனும் ஒரு துண்டுப் பிரசுரத்தில் இப்பாடல் முதன்முதலில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Edwin Hatch
ஆண்டவரைப் பற்றி அறிந்திராத பெற்றோருக்குப் பிறந்த எட்வின், தம் பள்ளிப்படிப்பை பர்மிங்ஹாமில் உள்ள எட்வர்ட் பள்ளியிலும் (King Edward School, Birmingham) தம் கல்லூரிப் படிப்பை ஆக்ஸ்ஃபோர்டிலும் (Pembroke College, Oxford) முடித்தார்.  கல்லூரிக் காலத்தில் எட்வினின் நண்பர்கள் ஓவியம், கவிதைகள் என்று ஆர்வம் நிறைந்தவர்களாய் இருந்தபோது அவர்களுடன் எட்வினும் நிறைய விமர்சனங்கள் (Reviews), நாளிதழ் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் காட்டினார்.  கல்லூரிப் படிப்பு முடிந்து அவருடைய நண்பர்கள் கலை மற்றும் இலக்கியத் துறையில் ஆர்வம்கொண்டு செல்ல, எட்வின் Church of England’ல் போதகராக அபிஷேகம் பெற்று, லண்டனின் கிழக்குப் பகுதியில் இருந்த தேவாலயம் ஒன்றில் ஆயராகப் பணி செய்யத் துவங்கினார்.

பின்னர் 1859 முதல் 1867வரை கனடாவின் Trinity College’ல் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், 1867ல் இங்கிலாந்துக்குத் திரும்பி, Oxford St. Mary’s Hall’ன் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். மேலும் Rector of Purleigh in Essex, University Reader in Ecclesiastical History என்று கல்வித்துறையின் பல்வேறு உயர் பதவிகளைக் கண்டார். இத்தனை பெரும்பதவிகள் வகித்தும், எட்வின், மிகவும் எளிமையான, பக்திநிறைந்த ஒரு மனிதராகத் திகழ்ந்தார்.

Robert Jackson
‘ஊதும் தெய்வாவியை’ நம் திருச்சபைகளில் மிக அரிதாகவே பாடப்படுகிறது. இப்பாடலுக்கான Trentham எனும் ராகத்தை ராபர்ட் ஜாக்ஸன் (Robert Jackson 1840-1914) என்பவர் அமைத்தார்.  ராபர்ட், லண்டனில் இருக்கும் பரி.மாற்கு தேவாலயத்தில் ஆர்கன் இசைக்கருவியை இசைத்து வந்தார்.  ஏறத்தாழ 46 வருடங்கள் தொடர்ந்து இத்தேவாலயத்தின் ஆர்கனிஸ்ட்’ஆக ராபர்ட் ஊழியம் செய்தார்.


பதிவு தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    ஊதும் தெய்வாவியை
புத்துயிர் நிரம்ப
நாதா என் வாஞ்சை செய்கையில்
உம்மைப் போல் ஆகிட

2.    ஊதும் தெய்வாவியை
தூய்மையால் நிரம்ப
உம்மில் ஒன்றாகி யாவையும்
சகிக்க செய்திட

3.    ஊதும் தெய்வாவியை
முற்றும் ஆட்கொள்ளுவீர்
தீதான தேகம் மனத்தில்
வானாக்னி மூட்டுவீர்

4.    ஊதும் தெய்வாவியை
சாகேன் நான் என்றுமாய்
சதாவாய் வாழ்வேன் உம்மோடு
பூரண ஜீவியாய்

பதிவு தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley

Post Comment

Tuesday, April 9, 2019

பாமாலை 277 – மா தூய ஆவி!

பாமாலை 277 – மா தூய ஆவி! இறங்கும்
(Come Holy Ghost, our souls inspire)

இந்தப் பாடலின் வயது 1000 என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! நம் பாமாலைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் மிகத் தொன்மையான பாடல்களுள் ‘மா தூய ஆவி! இறங்கும்’ பாடல் சிறப்பான ஒன்றாகும். தற்போது உள்ள வடிவில் கடந்த 350 ஆண்டுகளாக மட்டுமே இப்பாடல் பாடப்பட்டுவந்தாலும் இதன் தோற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகும் என்று பாடல் ஆய்வாளர் Ian Bradley தனது ‘Book of Hymns’ல் குறிப்பிடுகிறார்.

Rabanus Maurus (left) presents his work to Otgar of Mainz. Illustration from a Fulda manuscript, c. 830–840.
(Pic Credits - Wikipedia)
இப்பாமாலையின் மூல வடிவம் 9ம் நூற்றாண்டில் பாடப்பட்டுவந்த ‘Veni, creator spiritus’ என்ற லத்தீன் மொழி பாடலாகும்.  இப்பாடலை எழுதியவர் யார் என்பது குறித்த தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள், Emperor Charles the Fat, Gregory the Great, St Ambrose என்று நிறைய பெயர்களை முன்வைக்கின்றபோதும், Rhabanus Maurus (c. 780 – 4 February 856) (Archbishop of Mainz in East Francia) என்ற போதகரே இதை எழுதியவர் என்று நிறைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பத்தாம் நூற்றாண்டு முதலே இப்பாடல் பாடப்பட்டு வருவதற்கான ஆதாரங்களை நிறைய ஆய்வர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.  அந்நாட்களில், ஆலயமணிகள் முழங்க, மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, தூபவர்க்கத்துடன் பக்திசிரத்தையோடு ஒரு Ceremonial Hymnஆகப் பாடப்பட்டு வந்துள்ளது இப்பாடல்.

Rabanus (c. 780 – 4 February 856) கிழக்கு Francia’வில் Archbishop’ஆக ஊழியம் செய்து வந்தார். வேத ஆராய்ச்சி மட்டுமல்லாது, கவிதை எழுதுதல், Encyclopaedia உருவாக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளல், கல்வி, இலக்கணம், என்று பன்முகத்திறமை கொண்டவராக அறியப்படுகிறார். அவருடைய சரியான பிறந்த தேதி தெரியாவிட்டாலும் 801ம் ஆண்டு Benedictine Abbey of Fuldaவில் Deacon’ஆக அபிஷேகம் செய்யப்பட்டதற்கான குறிப்புகள் இருக்கின்றன.  803ம் ஆண்டு Abbey பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்ற அவர் அநேக பாடல்கள் எழுதியிருந்தாலும், Veni Creator Spiritus என்ற ராகத்தில் அமையப்பெற்ற இந்தப் பாடலே மிகப்பிரபலமாக விளங்குகிறது

Rev. John Cosin (1594-1672)
பதினோராம் நூற்றாண்டில் ஆயர்கள் அபிஷேக ஆராதனைகள் (Ordination Services) பேராயர்கள் பிரதிஷ்டை (Consecration of Bishops) ஆகிய ஆராதனைகள்/நிகழ்வுகளில் பாடப்பட்டு வந்த இப்பாடல், இன்றும் உலகமெங்கும் உள்ள அநேக திருச்சபைகளில் இந்த ஆராதனைகளில் பாடப்படுகிறது. “Come Holy Ghost Our souls inspire” எனும் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கிலாந்தில் வசித்து வந்த John Cosin (1594-1672) எனும் ஆயர் எழுதினார். 1627ம் ஆண்டு வெளியான ”Collection of Private Devotions in the Practice of the Ancient Church” எனும் புத்தகத்தில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு முதன்முதலில் வெளியிடப்பட்டது.  Cosin, ஆவியானவர் சபையின் மேல் இறங்கிவருவதைக் குறிக்கும் வண்ணமாக இந்தப் பாடலை தனது திருச்சபையில் காலைதோறும் பாடச்செய்தார்.  இப்பாடலின் நான்காவது சரணம் பாடப்பட்டபின்னர் Doxology என்றழைக்கப்படும் திரியேகத் துதி பாடப்படுகிறது.

பதிவு தகவல்கள் : The Daily Telegraph Book of Hymns by Ian Bradley & Wikipedia
Unison (சரணங்கள் 1 to 3)

Soprano (சரணங்கள் 1 to 3)

Alto (சரணங்கள் 1 to 3)

Alto with Soprano (சரணங்கள் 1 to 3)

Tenor (சரணங்கள் 1 to 3)

Tenor with Soprano (சரணங்கள் 1 to 3) 
 Bass  (சரணங்கள் 1 to 3)

Bass with Soprano  (சரணங்கள் 1 to 3) 
 Unison (சரணம் 4)

Soprano (சரணம் 4)

Alto (சரணம் 4)

Alto with Soprano (சரணம் 4)

Tenor (சரணம் 4)

Tenor with Soprano (சரணம் 4)

Bass (சரணம் 4)

Bass with Soprano (சரணம் 4)







































1. மா தூய ஆவி! இறங்கும்,
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்;
ஞானாபிஷேக தைலம் நீர்
நல் வரம் ஏழும் ஈகிறீர்.

2. மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்
உம் அபிஷேகம் தந்திடும்;
ஓயாத ஒளி வீசியே
உள்ளத்தின் மருள் நீக்குமே.

3. துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே
ஏராள அருள் பெய்யுமே;
மாற்றார் வராமல் காத்திடும்
சீர் வாழ்வு சுகம் ஈந்திடும்.

4. பிதா, குமாரன், ஆவியும்
திரியேகர் என்று போதியும்;
யுகயுகங்களாகவே
உம் தாசர் பாடும் பாட்டிதே:

பிதா, சுதன், சுத்தாவி! உமக்கே
சதா நித்தியமும் ஸ்துத்தியமே!
ஆ மென்

Post Comment

Friday, April 5, 2019

போற்றுவேன் என் மீட்பர் அன்பை

போற்றுவேன் என் மீட்பர் அன்பை
(I will sing of my Redeemer)

இப்பாடலை எழுதிய Philip Paul Bliss (9 July 1838 – 29 December 1876) அமெரிக்காவின் தலைசிறந்த பாடலாசிரியர்களுள் ஒருவராவார். பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி இசையமைப்பாளர், Music Conductor, பாடகர் என்று பல்வேறு முகங்களும் இவருக்கு உண்டு.  “Almost Persuaded”, “Hallelujah What a Saviour!” போன்ற பல்வேறு பாடல்கள் இவர் எழுதியவையே.

29 டிசம்பர் 1876 அன்று அமெரிக்காவின் பசிஃபிக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஃபிலிப்பும் அவரது மனைவியும் பயணித்தனர். ஓகியோ (Ohio) மாகாணத்தின் அஷ்தாபுலா (Ashtabula) நகரை அவர்கள் ரயில் நெருங்கியபோது, ஒரு பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் ரயில் கவிழ்ந்தது. ரயிலின் அத்தனை பெட்டிகளும் பாலத்தின் மேலிருந்து சரிந்து கீழே விழுந்தன. ரயிலில் பயணம் செய்த 159 பயணிகளும் இவ்விபத்தில் மாண்டுபோயினர். அந்த விபத்தில் ஃபிலிப் கொண்டு சென்ற அவரது பெட்டியிலிருந்து ‘I Will Sing of My Redeemer” என்ற பாடலை அவர் எழுதியிருந்த காகிதம் கண்டெடுக்கப்பட்டது.


அவ்விபத்து நிகழ்ந்து சில நாட்களுக்குப் பின்னர், அப்பாடல் ஜேம்ஸ் மெக்ரெனான் (James McGranahan) என்ற இசை வல்லுநரால் இசை வடிவம் பெற்றது. ஜேம்ஸ் பென்ஸில்வேனியா மாகாணத்தில் 1840ம் ஆண்டு பிறந்தார்.  தன் வாழ்நாளில் 25க்கும் அதிகமான பாடல்களுக்கான இசையை இவர் இயற்றியுள்ளார். இப்பாடலுக்காக ஜேம்ஸ் எழுதிய இந்த ராகத்தில், "O My Father" என்ற ஆங்கிலப்பாடலும் பாடப்படுகிறது.  ஜேம்ஸ் 1907ம் ஆண்டு தன் இல்லத்தில் இருந்தபோது மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. போற்றுவேன் என் மீட்பர் அன்பை
ப்ராணன் தந்து ரட்சித்தார்.
பாடுபட்டு ரத்தம் சிந்தி
பாவம், சாபம் நீக்கினார்

போற்றும்! போற்றும்! அல்லேலூயா
பூரண மீட்புண்டாக்கினார்!
தூய வல்ல ரத்தம் சிந்தி
தீய பாவம் நீக்கினார்.

2. நீசப் பாவியாம் என் பேரில்
நேசம் வைத்துக் காட்டினார்
மீட்கும் பொருளாகத் தம்மை
முற்றும் தந்தீடேற்றினார்.

3. போற்றுவேன் சம்பூர்ண மீட்பை
ப்ராணநாதர் காக்கிறார்
வாணாள் எல்லாம் பாவப்போரில்
வெற்றி காணச் செய்கிறார்.

4. போற்றுவேன் ஆனந்தமாக
பாடி, நன்றி சொல்லுவேன்
என்னை மீட்ட இயேசுவோடே
என்றும் தங்கி, சேவிப்பேன்.

Post Comment