Thursday, February 20, 2025

நன்மைக்கே எல்லாமே (It is Well with My Soul)

நன்மைக்கே எல்லாமே (It is Well with My Soul)

வாழ்க்கை நம்மால் முன்கணிக்க முடியாததாக இருக்கலாம்! மகிழ்ச்சியும் - துக்கமும், அழகான ஆசீர்வாதங்களும் - துயரம் தரும் சிரமங்களும், எதிர்பாராத விதமாக வரலாம். நம் வாழ்க்கையின் கனவுகளும் திட்டங்களும் ஒரு நொடியில் மாறக்கூடும். இது உண்மை என்று நாம் அனைவரும் அறிவோம். அப்படியானால், இத்தகைய கொந்தளிப்பின் மத்தியில் நாம் எவ்வாறு அமைதியைக் கண்டறிவது? 

Horatio Gates Spafford

அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் ஹொரேஷியோ ஜி. ஸ்பாஃபோர்ட் (Horatio Gates  Spafford) என்ற வழக்கறிஞர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். தமது வழக்கறிஞர் தொழிலுடன், ரியல் எஸ்டேட் முதலீட்டுத் தொழிலிலும் ஹொரேஷியா ஈடுபட்டு வந்தார். 

அமைதியாகப் போய்க்கொண்டிருந்த ஹொரேஷியாவின் வாழ்வில் 1871ம் ஆண்டு ஒரு பெரும் துயரம் நேர்ந்தது.  அந்த ஆண்டில், சிகாகோவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் தன் செல்வத்தை இழந்தார். அதே நேரத்தில், அவரது நான்கு வயது மகன் ஸ்கார்லெட் காய்ச்சலால் மரித்துப்போனான்.

இந்த துயரச் சுமைகளிலிருந்து சற்று தள்ளியிருக்க எண்ணிய ஹொரேஷியா, தனது குடும்பத்துடன் எங்காவது சென்று வரலாம் என்று நினைத்து,  தனது மனைவியையும் நான்கு மகள்களையும் ஒரு கப்பலில் இங்கிலாந்துக்கு அனுப்பினார்.   முதலில் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, தவிர்க்க இயலாத சில முக்கிய வேலைகளை முடித்தபின்னர், தானும் கிளம்பி அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்பது அவர் திட்டம்.

இருப்பினும், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும்போது, ​​ஹொரேஷியாவின் குடும்பத்தினர் பயணித்த கப்பல், ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கிக் கடலில் மூழ்கியது.   ஹொராஷியோ ஸ்பாஃபோர்டின் நான்கு மகள்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் அவ்விபத்தில் தங்கள் உயிர்களை இழந்தனர்.  அவர் குடும்பத்தில் அவரது மனைவி அன்னா மட்டுமே, அந்த துயரத்திலிருந்து தப்பினார். 

மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட ​​ஹொரேஷியாவின் மனைவி இங்கிலாந்து வந்தவுடன், "Saved alone. What shall I do?" [நான் மட்டுமே தப்பிப்பிழைத்தேன்.  இப்போது என்ன செய்வது?] என்று தனது கணவருக்கு ஒரு தந்தி (Telegram) அனுப்பினாள்.  தந்தியைக் கண்டு ஹொரேஷியா மனமுடைந்துபோய், உடனடியாக  இங்கிலாந்துக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டு அடுத்த கப்பலிலேயே கிளம்பினார்.
 
அவரது பயணத்தின் வழியில், கடலில் விபத்து நடந்த இடத்தைக் கப்பல் கடந்தபோது, கப்பலின் கேப்டன் ​​ஹொரேஷியா குடும்பத்தின் துயரக்கதையை அறிந்திருந்ததால், ஹொராஷியோவை அழைத்து, "இந்த இடத்தில்தான் உங்கள் குடும்பத்தினர் பயணம் செய்த கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியது" என்று கூறினார். ஹொராஷியோ தனது மகள்களைப் பற்றி நினைத்து துயருற்றபோது, ஆண்டவருடைய நம்பிக்கையின் வார்த்தைகள் அவரது இதயத்தையும் மனதையும் நிரப்பின.  

அந்த வார்த்தைகள் ஒரு அன்பின் பாடலாக அந்த இடத்திலேயே உருவெடுத்தது.

"When peace like a river, attendeth my way,
When sorrows like sea billows roll—
Whatever my lot, thou hast taught me to know
It is well, it is well with my soul".

"துன்பங்கள் என்னை நெருங்கி வந்தாலும்
யேசுவில் நிம்மதி பெற்றேன்.
என்ன நேர்ந்தாலும், அவர் வாக்குப்படி
நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே"

என்று ஆண்டவர் தன்னோடு பேசிய விசுவாச வார்த்தைகளை பாடலாக எழுதி முடித்தார்.  

பின்னர் Philip Paul Bliss என்பவர் இவ்வரிகளுக்கான ராகத்தை அமைத்தார். 

ஒருவேளை நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நாம் எப்போதும் சொல்ல முடியாது. எப்போதும் புயல்கள் இருக்கும், சில சமயங்களில் துயரங்களும் இருக்கும். ஆனால் அன்பான கடவுள் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய தெய்வீக உதவியில் விசுவாசம் வைத்தால், நாமும் நம்பிக்கையுடன் கண்டிப்பாகப் பாடலாம் "நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே".

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

துன்பங்கள் என்னை நெருங்கி வந்தாலும்
யேசுவில் நிம்மதி பெற்றேன்.
என்ன நேர்ந்தாலும், அவர் வாக்குப்படி
நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே

நன்மைக்கே எல்லாமே
நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே

2. சாத்தான் என்னைச் சோதிக்க வந்த போதும்
உம் வார்த்தையால் வென்றிடுவேன்.
யேசு எனக்காய் சிந்திய ரத்தத்தால்
எனக்கு வெற்றியே வெற்றியே

3. என் பாவங்கள் சிவேரென்றி ருந்தாலும்
யேசுவின் திரு ரத்தத்தால்
பஞ்சைப் போல் மிக வெண்மை யாகிடுமே
தோத்திரம், தோத்திரம் யேசுவே.

4. மேகங்கள் சால்வை போல் உருண்டோடிடும்
எக்காளம் தொனித்திடவே
மீட்பர் என்னை அழைக்க வந்திடுவார்
நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே.




Post Comment

2 comments:

  1. Can u also write the back ground of this song would be good

    ReplyDelete
    Replies
    1. The history of the song added to the post. Thanks.

      Delete