Tuesday, December 10, 2013

பாமாலை 62 - கேள் ஜென்மித்த

பாமாலை 62 – கேள்! ஜென்மித்த ராயர்க்கே
Hark! The herald angels sing

’உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக’. லூக்கா 2:14

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையில் பாடப்படும் பாடல்களில் ஒன்று ‘கேள்! ஜென்மித்த ராயர்க்கே’ என்னும் பாடலாகும்.  பெத்லகேமில் நமதாண்டவராகிய கிறிஸ்து பிறந்த தினத்தன்று நள்ளிரவில் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பருக்கு பரம சேனையின் திரள் தோன்றி, ‘உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக’ என்று பாடி, தேவனைத் துதித்தார்கள்.  தெய்வ தூதரின் பாட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறிஸ்தவச் சபைகளில் வெவ்வேறு இசைகளில் பாடப்படுகின்றது.

Charles Wesley (Source: Wiki)
இப்பாடலை எழுதியவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியின் சகோதரனான சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர். அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகருக்குப் பதினெட்டாவது குழந்தையாக 1707ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார்.  ஆக்ஸ்ஃபோர்டில் பயிலும்போது, அவர் மாணவரிடையே ஒரு கிறிஸ்தவக் குழுவை ஸ்தாபித்தார்.  இதைப் பலர் ஏளனமாக ‘ஆக்ஸ்ஃபோர்ட் மெதடிஸ்டுகள்” என அழைத்தனர்.  இக்குழுவே பின்னால் பிரசித்திபெற்ற, மெதடிஸ்ட் சபையாக துளிர்த்தது.

Felix Mendelssohn
Source : Wiki
சார்ல்ஸ் வெஸ்லி, பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதி, மொத்தம் 6500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். ‘கேள்! ஜென்மித்த ராயர்க்கே’ 1738ல் எழுதப்பட்டது.  முதலில் இது ஒரு பாடலாகக் கருதப்படாமல் ஒரு கவிதையாகக் (Poem) கருதப்பட்டு, “Poem of Christmas Day’ என அழைக்கப்பட்டது.  பின்னர், ஏதோ ஒரு உற்சாகமற்ற ராகத்தில் பல ஆண்டுகளாகப் பாடப்பட்டு வந்தது.  காலப்போகில் இப்பாடல் மக்கள் கவனத்திலிருந்து மறக்கக்கூடிய நிலையை அடைந்தது.  ஆனால் வில்லியம் கம்மிங் (William Hayman Cummings) என்னும் ஒரு பாடகர், பெலிக்ஸ் மெண்டல்சோன் (Felix Mendelssohn) என்னும் சங்கீத வித்வானின் ராகங்களைப் பாடிக்கொண்டிருக்கும்போது, ஓர் ராகம் வெஸ்லி எழுதிய கவிதைக்குப் பொருந்துவதைக் கண்டு, அந்த ராகத்தை இதற்கு அமைத்தார்.  இதுவே நாம் இப்போது பாடும் ராகம்.  இதற்குப் பின் இப்பாடல் கிறிஸ்து பிறப்புப் பாடல்களில் மிகவும் சிறப்புப் பெற்றுள்ளது.

அக்காலத்தில், ஆங்கிலத் திருச்சபைக் கீதப் புத்தகத்தில் இப்பாடல் தவறுதலாக நுழைக்கப்பட்டது.  அப்புத்தகத்தைத் தொகுத்தவர்கள், வெஸ்லி எழுதிய பாடல்களில் ஒன்றையாவது சேர்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் வேறொரு சபையை ஏற்படுத்தியவர்.  ஆனால் அப்புத்தகத்தின் தொகுப்பாளர்களில் ஒருவர், கிறிஸ்து பிறப்புக் கீதப் பகுதியிலிருந்த ஒரு காலியிடத்தை நிரப்புவதற்காக ஆங்கிலச் சபைப் போதகராகக் கருதப்பட்ட சார்ல்ஸ் வெஸ்லியின் இப்பாடலை சேர்த்துக்கொண்டார்.  பின்னால் இத்தவறு கண்டுபிடிக்கப்பட்டு, இதை நீக்க முயற்சித்தனர்.  ஆனால் மக்கள் இதை வெகுவாகப் பாராட்டியதால் அது நீக்கப்படவில்லை.  ஆகவே சார்ல்ஸ் வெஸ்லி தன் வாழ்க்கையின் ஆரம்பத்தில் எழுதிய இப்பாடல், அவரது பாடல்களில், மிகவும் பிரியமாகப் பாடப்பட்டுவரும் ஒரு பாடலாகும்.

இதை எழுதிய ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், தமது 81வது வயதில் 1788ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி, சார்ல்ஸ் வெஸ்லி லண்டன் மாநகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே!
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.

2.    வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே,
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க, நர தெய்வமே,
அருள் அவதாரமே
நீர், இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்.

3.    வாழ்க, சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி, ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக் கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்.
Hark! The Herald Angels Sing

Post Comment

1 comment: