Thursday, June 22, 2017

கர்த்தரின் வேலை செய்வீர் (Work, for the night)

கர்த்தரின் வேலை செய்வீர்
(Work for the night is coming)

’ஒருவனாலும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது’ யோவான் 9 : 4

மானிடவர்க்கத்துக்கு உழைப்பு மிகவும் இன்றியமையாதது.  ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாம் வெளியேற்றப்பட்டபின், வியர்வை சிந்தி வேலை செய்யவேண்டியவனாயிருந்தான்.  உழைப்பின் மகிமையையும், சோம்பேறித்தனத்தின் தீமையையும் குறித்து, திருமறையின் அநேகப் பகுதிகளில் காணலாம்.  சோம்பேறித்தனத்தைக் கண்டித்து, எறும்புகளின் வாழ்க்கையிலிருந்து சுறுசுறுப்பைக் கற்றுக்கொள்ளும்படி சாலொமோன் ஞானி போதித்திருக்கிறார் (நீதி 5:6).  ஆண்டவரும் வேலை செய்பவர்களைக் குறித்துப் பல உண்மைகளைக் கூறி, வேலை செய்தவனே கூலிக்குப் பாத்திரனாவான் எனக்காட்டிருக்கிறார் (மத் 10:10; லூக் 10:7).  கடினமாக உழைத்தவன் தகுந்த ஊழியத்தைப் பெறுவதை நமது அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம்.  புதிய உலகம் என்றழைக்கப்படும் அமெரிக்கக் கண்டத்தில் முதலில் குடியேறியவர்கள் அதிகக் கஷ்டப்பட்டு உழைத்ததின் பயனாக, அக்கண்டம் இன்று தலைசிறந்து விளங்குகிறது.

கடவுளுக்கடுத்த வேலைகளிலும் இவ்விதச் சிரத்தை காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.  ’கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என எரேமியா தீர்க்கதரிசி எச்சரித்திருக்கிறார்.  தமது மூன்றரையாண்டு ஊழியத்தில், நமது ஆண்டவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற ஓய்வின்றி உழைத்தார்.  அப்போஸ்தலர் நடபடிகளிலும், நிருபங்களிலும், ராஜ்ஜியத்தின் பிரபல்லியத்திற்காக அப்போஸ்தலர் ஓயாது உழைத்ததைக் காணலாம்.  ஆகவே நாமும் ஆண்டவரின் ஊழியத்தைத் தளராது செய்ய ஏவப்படுகிறோம்.

இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த அன்னா லூயிசா அம்மையார் (Annie Louisa), 1854ம் ஆண்டு, தன் பெற்றோரோடு கனடா நாட்டுக்குச் சென்று குடியேறினார்.  அக்காலத்தில் கனடா ஆங்கில அரசின் ஒரு குடியேற்ற நாடாக (Colony) இருந்தது.  அங்கு முதலில் குடியேறிய மக்கள் மிகவும் கடினமாக வேலை செய்து நாட்டை சீர்படுத்தவேண்டியிருந்தது.  ஏனெனில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கனடா நாடு ஆள் சஞ்சாரமற்றுக் காடு மேடாக இருந்தது.  அன்னா லூயிசாவின் குடும்பத்தினர் அங்கு சென்றபோதும், மக்களின் கடின உழைப்பு மிகவும் அவசியமாயிருந்தது.  இதைக் கவனித்த அம்மையார், உழைப்பின் தேவையை உணர்ந்தார்.  ஒருநாள் இரவு அவர்கள் திருமறையைப் படித்துக்கொண்டிருக்கும்போது, யோவான் 9:4-ல் ‘ஒருவனாலும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது’ என்னும் வசனத்தைக்கொண்டு, உழைப்பின் அவசியத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில், ’கர்த்தரின் வேலை செய்வீர்’ என்னும் பாடல் அவர் மனதில் உருவானது.  உடனே அதை அவர் எழுதிவைத்தார்.  இப்பாடலை எழுதும்போது அவருக்கு வயது பதினெட்டு.  சங்கீதப் பண்டிதரான லவ்வல் மேசன் (Lowell Mason) இதற்கு ஓர் அழகிய ராகத்தை அமைத்துள்ளார்.

Lowell Mason
இப்பாடலை எழுதிய அன்னா லூயிசா அம்மையார் 1836ம் ஆண்டு இங்கிலாந்தில் ஸ்டாபர்டுஷயர் (Kiddermore, Stafford­shire) என்னுமிடத்தில் பிறந்தார்.  அவரது தந்தையான ராபர்ட் வாக்கர் (Robert Walker) என்பவர் ஒரு பொறியாளராக வேலைபார்த்தவர்.  அவரது மூன்று பெண் மக்களில் ‘அன்னா லூயிசா’தான் கடைசி பிள்ளை.  அன்னா லூயிசா பதினெட்டு வயதாயிருக்கையில், வாக்கர் குடும்பம் கனடா நாட்டில் குடியேறினர்.  அங்கு மூன்று சகோதரிகளும் சேர்ந்து பெண்களுக்கான ஒரு சிறிய பள்ளி ஆரம்பித்தனர்.  சில காலத்துக்குப்பின், இரு மூத்த சகோதரிகளும் இறந்துபோனதால், பள்ளியை மூடவேண்டியதாயிற்று.  1863’ல் அன்னா லூயிசா இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து, அங்கு ஒரு மாணவிகள் இல்லத்தில் மேற்பார்வையாளராகவும், புத்தக மதிப்புரை எழுதுபவராகவும் பணியாற்றினார்.  1883’ல் அவர் ஹாரி காக்ஹில் (Harry Coghill) என்னும் ஒரு செல்வந்தரை மணந்து, ஹேஸ்டிங்க்ஸ் நகரில் வசிக்கலானர்.

அன்னா காக்ஹில் அம்மையார் 1907’ம் ஆண்டு தமது 71வது வயதில் பாத் நகரில் மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    கர்த்தரின் வேலை செய்வீர்
விடியற் காலத்தில்
வைகறை சுகமான
நல்ல நேரத்தில்
சூரியன் வானில் ஏறி
கிரணம் வீசவும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்

2.    கர்த்தரின் வேலை செய்வீர்
மா உஷ்ண வேளையும்
வெயிலும் எரித்தாலும்
ஒளியாதிரும்
ஊழியம் செய்து வாரும்
இடைவிடாமலும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்

3.    கர்த்தரின் வேலை செய்வீர்
பொழுது போகுமே
சிவந்த வானம் பாரும்
ஒளி நீங்குமே
சந்திய காலமாகி
இருள் உண்டாகவும்
ராத்திரி மா சமீபம்
வேலை ஓய்ந்திடும்
*******************************************************

1.         Work, for the night is coming,
Work thro' the morning hours;
Work while the dew is sparkling,
Work 'mid springing flow'rs.
Work when the day grows brighter,
Under the glowing sun;
Work, for the night is coming,
When man's work is done.

2.         Work for the night is coming,
Work thro' the sunny noon;
Fill brightest hours with labor--
Rest comes sure and soon.
Give every flying minute
Something to keep in store;
Work, for the night is coming,
When man works no more.

3.         Work for the night is coming,
Under the sunset skies:
While their bright tints are glowing,
Work, for daylight flies.
Work till the last beam fadeth,
Fadeth to shine no more;
Work, while the night is dark'ning,
When man's work is o'er.




Post Comment

No comments:

Post a Comment