Tuesday, February 25, 2014

பாமாலை 329 - அருள் நாதா நம்பி (Bullinger)

பாமாலை 329 – அருள்நாதா நம்பி வந்தேன்
(I am trusting thee)

என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை’. யோவான் 6: 37

Frances Ridley Havergal
ஆங்கிலேயக் கவிஞர் பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் (Frances Ridley Havergal), அம்மையார் அவர்களின் குழந்தை உள்ளத்தின் அழகிய வெளிப்பாடே இப்பாடலாகும்.  இவர் ‘பாமாலைகளின் இனிமை மிக்க குரல்’ என்று புகழாரம் பெற்றவர். உயர்ந்த கல்வியும் நாகரீகமும்மிக்கவராக இருந்தாலும், ஹேவர்கல் ஆண்டவர் மீது எளிமையான, குழந்தையைப்போன்ற விசுவாசமும், திடநம்பிக்கையும் எப்போதும் கொண்டிருந்தார்.  அர்ப்பணத்தை மையமாகக்கொண்டு பாடல்கள் எழுதிய இவரின் வாழ்வு, ஆவிக்குரிய பரிசுத்தம் நிறைந்ததாக விளங்கியது.  முதலாவது, ஜெபிக்காமல் இவர் ஒரு வரியைக்கூட இவர் எழுதியதில்லை.

     ’எந்தன் ஜீவன் இயேசுவே’ போன்ற பல பிரபல பாமாலைகளை ஹேவர்கல் இயற்றியிருந்தாலும், இப்பாடலே அவர் மிகவும் விரும்பிய படைப்பாகும்.  அவர் மரிக்கும்போது அவரது சொந்த வேத புத்தகத்தில் இப்பாடலின் பிரதி ஒன்றையே வைத்திருந்தார்.  இப்பாடலை அவர் 1874ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் டெஸ்ஸாசிலுள்ள ஒர்மாண்டில் எழுதினார்.  இப்பதிவில் இருக்கும் “Bullinger” எனும் ராகத்தை Ethelbert W. Bullinger என்பவர் அமைத்துள்ளார்.

Ethelbert W. Bullinger
     பிரான்ஸஸ் ஹாவர்கல் அம்மையார் 1836ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி இங்கிலாந்தில் ஆஸ்ட்லே என்னும் ஊரில் ஒரு பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தார்.  அவரது தந்தை ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு குருவானவர்.  நான்கு வயதாயிருக்கும்போதே, அம்மையார் வேத புத்தகத்தை வாசிக்கப் பழகியிருந்தார்.  பின்னர், புதிய ஏற்பாடு முழுவதையும், பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளையும் மனப்பாடம் பண்ணியிருந்தார்.  இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் கல்வி பயின்று ஆங்கிலம் தவிர ஐந்து பிறமொழிகள் கற்றார்.  சங்கீதத்தில் அதிகத் திறமை பெற்று, இனிமையாகப் பாடவும், ராகங்கள் எழுதவும், சங்கீதக் கருவிகள் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.  மேலும், ஓய்வுநாட்பள்ளியில் போதிப்பதிலும், வாசிக்கத் தெரியாத மக்களுக்கு வேதத்தை வாசித்துக் கொடுப்பதிலும், ஏழை மக்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார்.  ஹாவர்கல் அம்மையார் தன் குறுகிய வாழ்க்கையில் அநேக பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய இதர பாடல்களில் சில:

·         ’நாதா உம் வார்த்தை கூறவே’ – பாமாலை 201.
·         ‘எந்தன் ஜீவன் இயேசுவே’ – பாமாலை 302
·         நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும் - பாமாலை 349
·         தெய்வ சமாதான இன்ப நதியே’ – பாமாலை 357

அவர், 1879ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதி வேல்ஸ் நாட்டில் சுவான்ஸீ (Swansea, Wales) என்னுமிடத்தில் தமது 42ம் வயதில் காலமானார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.

2.    தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.

3.    தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்தி செய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.

4.    துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.

5.    சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.

6.    இயேசு நாதா, நம்பி வந்தேன்
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.

Post Comment

1 comment: