Friday, February 14, 2014

பாமாலை 9 - பூலோகத்தாரே யாவரும் (Old Hundredth)

பாமாலை 9 – பூலோகத்தாரே யாவரும்
(All people that on earth do dwell)

மிகவும் எளிமையான அதே நேரம் மிக அற்புதமான வடிவத்தில் அமையப்பெற்றிருக்கும் இப்பாடலானது ஆங்கிலத்தில் வெளிவந்த பாடல்களுள் மிகவும் பழமையான பாடலாகும். சங்கீதம் 100ன் பொழிப்புரையாய் அமையப்பெற்றுள்ள பாரம்பரியமிக்க இப்பாடல் இன்றளவும் நம் ஆலய ஆராதனைகளில் பாடப்பட்டு வருவது இதன் சிறப்பாகும்.  சீர்திருத்தத் திருச்சபை உருவான காலகட்டத்தில் பாடல் வடிவில் எழுதப்பட்ட முதல் சங்கீதம் இதுவே.

”பரிசுத்த வேதாகமத்தின் சங்கீதங்களின் அடிப்படையில் எழுதப்படும் பாடல்களே ஆலய ஆராதனைகளுக்கு உகந்தவை” என்ற கருத்தைக் கொண்டிருந்த ஜான் கால்வின் (John Calvin) எனும் பெயர்கொண்ட சீர்திருத்தவாதியின் வழி வந்த கவிஞர்கள் இத்தகைய பாடல்களை அக்காலத்தில் அதிகமாக எழுதி வந்தனர்.  15ம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து எல்லையில் வசித்துவந்த வில்லியம் கேத் (William Kethe) என்பவரால் இப்பாடல் எழுதப்பட்டது.  வில்லியம் முதலில் ஃப்ராங்க்ஃபர்ட் எனும் நகரத்திலும், பின்னர் ஜான் கேல்வின் வசித்த ஜெனீவாவிற்கும் சென்று பரிசுத்த வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும், சங்கீதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடல்களைப் புத்தகமாகத் தொகுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

1561ம் ஆண்டு ஜெனீவாவில் முதன்முறையாக ‘All people that on earth” பாடல் வெளியிடப்பட்டது.  வில்லியம் கேத் இப்பாடலின் முதல் நான்கு பல்லவிகளை மட்டுமே எழுதினார். ஐந்தாவதாகப் பாடப்படும் ‘விண் மண்ணில் ஆட்சி செய்கிற’ என்கிற Doxology என்றழைக்கப்படும் பல்லவி மெத்தடிஸ்ட் சபை உருவான துவக்கத்தில் ’கடவுள் துதி’யாக இணைக்கப்பட்டு பாடப்பட்டது.  பெருவெள்ளம், புயல் போன்ற பேரழிவுகளின்பின்னரும் இந்த ஐந்தாம் பல்லவி, தம்மைப் பாதுகாத்தக் கடவுளுக்கு நன்றி சொல்லும் பாடலாகப் பாடப்பட்டது.  இச்சரணத்தை தாமஸ் கென் (Thomas Ken) (1637-1711) என்பவர் எழுதினார்.

All people that on earth” பாடலின் இரண்டாவது பல்லவியின் மூன்றாவது வரியில் வரும் “We are his folk” என்பதைக் குறித்த ஒரு சுவாரசியத் தகவலை Ian Bradley எழுதியுள்ள ‘Book of Hymns” எனும் புத்தகத்தில் காண நேரிட்டது.  1561ல் இப்பாடல் வெளியிடப்பட்ட பின்னர் அநேக வருடங்களுக்கு இந்த மூன்றாவது வரி, “We are his flock” என்றே பாடப்பட்டு வந்தது. இதன் காரணம் முதன்முதலில் இந்தப்பாடல் அச்சிடப்பட்டபோது “folk” எனும் வார்த்தை பழைய ஆங்கில Spelling வழக்கத்தின்படி “folck” என்று அச்சிடப்பட்டது.

Flock” எனும் வார்த்தையே “Folck” என்று Spelling Mistake’உடன் தவறாக அச்சிடப்பட்டது என்ற ஒரு எண்ணத்தாலும், சங்கீதம் 100:3ம் வசனத்தில் வரும் ‘அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்’ என்ற வார்த்தைகளின் அடிப்படையில் ‘We are his flock” என்று எழுதப்பட்டுள்ளது என்ற எண்ணிய காரணத்தாலும், இப்பல்லவியின் மூன்றாவது வரி Flock என்ற வார்த்தையுடனேயே அச்சிடப்பட்டுத் திருச்சபையினர் பாடிவந்தனர்.  ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளாக அவ்வார்த்தையை Flock என்றே திருச்சபையினர் பாடிவந்தனர். அநேக ஆண்டுகளுக்குப் பின்னர் 1904ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Ancient and Modern’ பாடல் புத்தகத்தில், இப்படி ‘flock’ என்று தவறாகப் பாடப்பட்டு வந்த வார்த்தை ‘Folk” என்ற திருத்தத்துடன் வெளியிடப்பட்டது.

லூயி பர்காய்ஸ் (Louis Bourgeois) (1510-1560) என்பவர் இப்பாடல் பாடப்படும் Old Hundredth” எனும் ராகத்தை அமைத்துள்ளார்.


பதிவு தகவல்கள் : The Daily Telegraph Book of Hymns by Ian Bradley

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களி கூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள்.

2.    பராபரன் மெய்த் தெய்வமே
நாம் அல்ல அவர் சிஷ்டித்தார்
நாம் ஜனம், அவர் ராஜனே
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

3.    கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி, துதி செய்யுங்கள்

4.    கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே

5.    விண் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும்.

All people that on Earth do dwell

Post Comment

No comments:

Post a Comment