Wednesday, October 16, 2013

பாமாலை 384 - யுத்தம் செய்வோம்

பாமாலை 384 – யுத்தம் செய்வோம், வாரும்
(Onward, Christian Soldiers)

’நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள்… உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார்’ உபா 31 : 6

இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போது, 1941ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 10ம் தேதி கனடா நாட்டுக்கு கிழக்கிலிருக்கும் நியுபவுண்ட்லாந்து (Newfoundland) தீவுக்கருகில், ’ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ (Prince of Wales) என்னும் போர்க்கப்பலின் மேல்தட்டில், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் (Winston Churchill), அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும் (Roosevelt), இரு நாடுகளின் கப்பற்படையினருடன், ஞாயிறு காலையில், காலை ஆராதனைக்காக அணிவகுத்து நின்றனர்.  அவ்வாராதனையில், சர்ச்சிலின் வேண்டுகோளுக்கிணங்கி, ‘யுத்தம் செய்வோம், வாரும்’ என்னும் பாடல் எல்லோராலும் மிக உற்சாகத்துடன் பாடப்பட்டது.  இச்சந்திப்பில்தான் ‘அட்லான்டிக் சாசனம்’ (Atlantic Charter) வகுக்கப்பட்டது.  இப்பாடலைப் பாடும்போது, கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும், இரு கிறிஸ்தவ நாடுகளுக்கும் மேலோகிலிருந்து எக்காளத்தொனி உண்டானதுபோல தனக்குத் தோன்றியது என சர்ச்சில் கூறியுள்ளார்.

“We sang "Onward, Christian Soldiers" indeed, and I felt that this was no vain presumption, but that we had the right to feel that we serving a cause for the sake of which a trumpet has sounded from on high. When I looked upon that densely packed congregation of fighting men of the same language, of the same faith, of the same fundamental laws, of the same ideals ... it swept across me that here was the only hope, but also the sure hope, of saving the world from measureless degradation”.

— Winston Churchill

(Source credits : Wikipedia)

Sabine Baring-Gould
(Source : Wikipedia)
இப்பாடலை எழுதிய பாரிங் கூல்டு போதகர் (Sabine Baring-Gould), ஆங்கிலச் சபையைச் சேர்ந்தவர்.  அவர் இங்கிலாந்தில், டெவான்ஷயர் (Devonshire) என்னுமிடத்தில் 1834ம் ஆண்டு, பிரபுக்கள் மரபில் பிறந்தார்.  தனது தந்தைக்கு மூத்த குமாரனாதலால் திரண்ட ஆஸ்தியைப் பெற்று, சொகுசாக வாழ்ந்துவந்தார்.  ஆயினும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து, அவளையே மணந்துகொண்டார்.  பின்னர் குருப்பட்டம் பெற்று, பல சபைகளில் திருப்பணியாற்றினார்.

சில ஆண்டுகளுக்குப் பின், அவர் யார்க்‌ஷயர் (Yorkshire) மாகாணத்திலுள்ள ஹார்பரி (Horbury) கிராமத்தில் போதகராக ஊழியம் செய்ய நியமனம் பெற்றார்.  அச்சபையில் பரிசுத்தாவியின் திருநாளுக்கு அடுத்த நாளாகிய திங்கள் (Whit Monday) சிறுவர்களின் விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.  அன்றையதினம் ஊரிலுள்ள சிறுவர்கள் யாவரும் நல்ல ஆடைகள் அணிந்து, கொடிகளைப் பிடித்து, பாட்டுப்பாடிக்கொண்டு, தெருத்தெவாக ஊர்வலம் வருவார்கள்.  ஊர்வலத்தில் பாடுவதற்கேற்ற பாடல்களைத் தேர்ந்தெடுக்க, பாரிங் கூல்டு போதகர் கேட்டுக்கொள்ளப்படவே, அவர் பல பாட்டுப் புத்தகங்களில் தேடிப்பார்த்தார்.  ஆனால் அவற்றிலிருந்த பாடல்கள் ஒன்றும் அவருக்குத் திருப்தியாகத் தோன்றவில்லை.  ஆகவே அவர், தாமே ஒரு பாடலை எழுதத் தீர்மானித்து, ‘யுத்தம் செய்வோம், வாரும்’, என்னும் பாடலை பதினைந்து நிமிடங்களில் எழுதினார்.
Arthur Sullivan
(Source : Wikipedia)
இளைஞர்கள் கிறிஸ்துவுக்காகப் போர் செய்யச் செல்லும் வீரர்கள் என்னும் எண்ணத்தோடு இப்பாடல் எழுதப்பட்டது.  மறுநாள் இப்பாடலை மிகவும் உற்சாகத்தோடு பாடிக்கொண்டு ஹார்பரிச் சிறுவர்கள் ஊர்வலம் சென்றனர்.  இப்பாடல் ஹார்பரியில் நடந்த ஊர்வலத்துக்காக எழுதப்பட்டிருந்தாலும், இப்போது உலகமெங்கும் கிறிஸ்தவச் சிறுவர்களின் அணிவகுப்புப் பாடலாகப் பல மொழிகளில் பாடப்பட்டு வருகிறது.  இப்பாடலின் சிறந்த மதிப்பிற்கு அதின் ராகம் ஒரு முக்கிய காரணமாகும்.  ‘St. Gertrude’ எனப்படும் இந்த ராகம், ஸர். ஆர்தர் சல்லிவன் (
Arthur Sullivan) என்னும் சங்கீத நிபுணரால் இயற்றப்பட்டது.

பாரிங் கூல்டு போதகர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் ஏராளமான பாடல்களும், செய்யுள்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவர் எழுதிய இதர பாடல்களில் பிரபலமானவை:

‘துக்கம், திகில், இருள் சூழ’ – பாமாலை 382
‘உயிர்த்தெழும் காலைதன்னில்’ – பாமாலை 396
“Now the day is over’ – S.S.296.


அவர் 1924ம் ஆண்டு, ஜனவரி மாதம், 2ம் தேதி தமது 90ம் வயதில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    யுத்தம் செய்வோம், வாரும்
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக
முன்னே போகிறார்
ஜெயக் கொடி ஏற்றி
போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!

2.    கிறிஸ்து வீரர்காள், நீர்
வெல்ல முயலும்
பின்னிடாமல் நின்று
ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த
தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம்
அஞ்சி அசையும்!

3.    கிறிஸ்து சபை வல்ல
சேனை போன்றதாம்
பக்தர் சென்ற பாதை
செல்கின்றோமே நாம்
கிறிஸ்து தாசர் யாரும்
ஓர் சரீரமே
விசுவாசம், அன்பு,
நம்பிக்கை ஒன்றே.

4.    கிரீடம், ராஜ மேன்மை
யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே
என்றும் நிலைக்கும்
“நரகத்தின் வாசல்
ஜெயங்கொள்ளாதே”,
என்ற திவ்விய வாக்கு
வீணாய்ப் போகாதே.

5.    பக்தரே, ஒன்றாக
கூட்டம் கூடுமேன்
எங்களோடு சேர்ந்து
ஆர்ப்பரியுமேன்;
விண்ணோர் மண்ணோர் கூட்டம்
இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை
என்றும் பாடுமே.

Onward Christian Soldiers

Post Comment

No comments:

Post a Comment